“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பிரதமர் மோடி கருத்து

“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பிரதமர் மோடி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: தேர்தலில் தமிழக மக்கள் புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று (மே 4) டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியது: “மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளம் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்.

தேர்தல் பணியாற்றிய பாஜக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் பல்வேறு இடங்களில் தாமரையை மலர செய்துள்ளனர். பாஜக தலைவராக நிதின் நவீன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் தேர்தல் இது. அவரது வழிகாட்டுதல் நமக்கான வெற்றி பாதையாக அமைந்தது.

மேற்கு வங்கத்தின் சிறப்பான எதிர்காலத்துக்கு பாஜக உழைக்கும் என்ற உறுதியை அளிக்கிறேன். இனி மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்வோம். மேற்கு வங்க அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. எங்கள் அரசின் கவனம் மாற்றத்தில் இருக்கும். பழிவாங்கும் அரசியல், வன்முறை அரசியல் இனி வங்கத்தில் இருக்காது.

தமிழக மக்கள் புதிய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். கேரளத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்திய அரசு தோளோடு தோள் நின்று பணியாற்றும் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பிரதமர் மோடி கருத்து
“மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்” - உதயநிதி ஸ்டாலின் | தேர்தல் முடிவுகள் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in