

புதுடெல்லி: ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது பொய் என்றும், 36 ரஃபேல் விமானங்களும் இந்திய விமானப்படை சேவையில் இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 6-ம் தேதி இரவு, இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்களைகுறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் தொடங்கியது.
இந்த மோதல், மே 10-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியாவின் 5 ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில் ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் வீழ்த்தியதாகக் கூறுவது பொய் என்றும், இந்தியாவின் விமானப்படையில் இருக்கும் 36 ரஃபேல் விமானங்களும் சேவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) வெளியிட்டுள்ள ஆவணத்தில் கூறியிருப்பதாவது: 2016-ல் இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான, அதாவது அனைத்து 36 ரஃபேல் போர் விமானங்களும் சேவையில் உள்ளன. இந்த விமானங்களைப் பராமரிப்பதற்கான 5 மாத கால ‘பிரிட்ஜ் சப்போர்ட்' தொகுப்புக்கான ஏலம் மீண்டும் கோரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகும் விமானங்களின் செயல்பாட்டைத் தொடர்வதற்கான பராமரிப்பு, தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை இந்த ஆவணம் கோரியுள்ளது. மேலும் இந்த 5 மாத ஆதரவுக் காலத்தில் சுமார் 2,250 மணி நேரத்துக்கு விமானங்கள் பறப்பதற்கான நேரமும் திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டகால ஆதரவு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரை தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்வதே இந்த ‘பிரிட்ஜ் சப்போர்ட்' ஏற்பாட்டின் நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் எந்த ஒரு ரஃபேல் விமானமும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின்போது பல இந்திய ரஃபேல் விமானங்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்வைத்த வாதத்தை இந்த ஆவணம் நேரடியாக மறுப்பது குறிப்பிடத்தக்கது. ஏதேனும் விமான இழப்பு ஏற்பட்டிருந்தால், பராமரிப்பு முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்திருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.