

புதுடெல்லி: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின்படி செயல்படும் ஷேசாத் பாட்டி தலைமையிலான கும்பல் சதி செய்வதாக உ.பி. சிறப்பு பிரிவு போலீஸாருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கடந்த மார்ச் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணையைத் தொடங்கினர்.
டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், டெல்லி - சோனிபட் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல உணவு விடுதி, அங்கு வரும் மக்கள் கூட்டம், ஹரியானாவில் உள்ள ராணுவ முகாம், உ.பி. காவல் நிலையங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி திட்டம் தீட்டியுள்ளது தெரிந்தது.
இதையடுத்து மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்வீர் மற்றும் விவேக் பஞ்சரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 9 பேர் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.