

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர்.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த மழை ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவானது. கேத்திரெட்டிப்பள்ளி, சந்திராநகர், மாதப்பூர், கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி, மணிகொண்டா, பிலிம் நகர், ஜூபிளி ஹில்ஸ், சார்மினார், மியாபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
இந்தச் சூழலில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹைதராபாத் நகரில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேத்திரெட்டிப்பள்ளியில் 12.9 சென்டிமீட்டர், சந்திராநகரில் 12.7 சென்டிமீட்டர், லிங்கப்பல்லியில் 11.7 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் சில இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் மழை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பருவமழை தொடங்கியுள்ளது. ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அன்று மும்பையில் மழை பதிவானது. இந்த சூழலில் மும்பையில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை சூழல் காரணமாக இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிஹார், அசாம், மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல கர்நாடகா, கேரளம், கோவா கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.