

புதுடெல்லி: இந்தியாவின் தோற்றம் குறித்து ஆராயும் சவுமியா அசோக் எழுதிய கீழடி அகழாய்வு பற்றிய நூல் விரைவில் வெளியாக உள்ளது.
சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அறிமுக எழுத்தாளருமான சவுமியா அசோக், ‘தி டிக்: கீழடி அண்ட் தி பாலிடிக்ஸ் ஆப் இந்தியா'ஸ் பாஸ்ட்' என்ற தலைப்பிலான புதிய நூலை எழுதி உள்ளார். இதை ஹேசெட் இந்தியா பதிப்பகம் வரும் 23-ம் தேதி வெளியிட உள்ளது. இந்த நூல் இந்தியாவின் தோற்றம் குறித்த நீண்டகால விவாதங்களை ஆழமாக ஆராய்வதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் கீழடி கடந்த 2014-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இது இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஏனெனில், இது, தென்னிந்தியாவில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரம் என்று ஒரு சாராரால் போற்றப்படுகிறது. ஆனால், இது அரசியல் கட்டுக்கதை என்று ஒரு சிலர் நிராகரிக்கின்றனர்.
இந்த நூல், கூர்மையான நுண்ணறிவை நகைச்சுவையுடன் கலந்து, அறிவியல் மற்றும் வரலாறு குறித்த அரசியல் சண்டைகள் எவ்வாறு இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய நமது புரிதலைத் தொடர்ந்து வடிவமைக்கின்றன என்பதை விளக்குகிறது.
இதுகுறித்து சவுமியா கூறும்போது, "கீழடி அகழாய்வு, தமிழ் மக்களிடையே எவ்வளவு ஆழமாக எதிரொலித்தது என்பதையும், மேலும் வளர்ந்து வரும் ஒருமைப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு சின்னமாக அது எவ்வாறு மாறியது என்பதையும் கண்டு ஈர்க்கப்பட்டேன்.
நம்முடைய தோற்றம் குறித்த கதைகள் நாம் கற்பனை செய்வதைவிட மிகவும் சிக்கலானவை என்பதை எனது நூல் ஆராய்கிறது. நாட்டின் பல தரப்பட்ட மக்களின் குரல்கள் மூலம், அந்தச் சிக்கலான தன்மையை வெளிப்படுத்த நான் முயன்றுள்ளேன். இது ஒரு எளிதான வாசிப்பு அனுபவமாக இருக்கும். இதில் எனது நகைச்சுவையையும் சற்று கலந்திருக்கிறேன்" என்றார்.