

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினத்தை ஒட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். தேசிய கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன்.
என்னுடைய முதல் எதிரி பாஜக, இந்த நேரத்தில் எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்ற கண்ணோட்டத்தில் சிந்திக்கக்கூடாது. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி மாணவர் அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் என்னிடம் பேசினர். உத்தவ் தாக்கரே, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தகவல்களை அனுப்பி உள்ளனர். அகிலேஷ் யாதவ் நேரில் வந்து ஆதரவை தெரிவித்தார். மாநில, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.