

பெங்களூரு: எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் நேற்று தெரிவித்தனர்.
கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கே.சி.வேணு கோபால் கேட்டுக்கொண்டபடி, டி.கே.சிவகுமாரை சித்தராமையா தொடர்பு கொண்டு பெங்களூருவில் உள்ள தனது காவிரி இல்லத்துக்கு சிற்றுண்டி சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்தார். இதையேற்று நேற்று அங்கு சென்ற டி.கே.சிவகுமாரை வரவேற்ற சித்தராமையா, அவருடன் காலை உணவை சாப்பிட்டார். பின்னர் இருவரும் தனியாக 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சித்தராமையா கூறும்போது, ‘‘காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடி நானும் துணை முதல்வர் டிகே சிவகுமாரும் ஒன்றாக காலை சிற்றுண்டி சாப்பிட்டோம். எங்களுடைய சந்திப்பு சிறப்பாக அமைந்தது. எனக்கும், டி.கே. சிவகுமாருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எதிர்காலத்திலும் எந்த முரண்பாடும் இருக்காது. இருவரும் சேர்ந்து செயல்படுவோம். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவோம். பெங்களூரு மாநகராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் எவ்வாறு வெல்வது என்பது குறித்து பேசினோம்’’ என்றார்.
சுமுக உறவு நீடிக்கும்: டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘‘சித்தராமையா எனக்கு காலையில் சிற்றுண்டி அளித்து உபசரித்தார். நான் அவரை எனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளிக்க இருக்கிறேன். கர்நாடக மக்கள் எங்களின் மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மையுடன்கூடிய வெற்றியை அளித்துள்ளனர். எனவே மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.
சித்தராமையாவே மீதம் உள்ள இரண்டரை ஆண்டுக்கும் முதல்வர் பதவியில் தொடர்வாரா அல்லது மாற்றப்படுவாரா என்பது குறித்து இருவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.