புதுடெல்லி: ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீண்டும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘‘இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் இன்று (பிப். 12) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன். அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய ராகுல் காந்தி, ‘‘நாம் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல்கள் நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சீனா, ரஷ்யா மற்றும் பிற சக்திகள் சவால் விடுகின்றன. போர் சகாப்தம் முடிந்துவிட்டதாக பிரதமர் மோடியும், பாதுகாப்பு ஆலோசகரும் சில நாள்களுக்கு முன் தெரிவித்தனர். ஆனால், நாம் போர் சகாப்தத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உக்ரைன், காசா, மத்திய கிழக்கு நாடுகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. ஈரானில் போர் அச்சுறுத்தல் இருக்கிறது. நாமும் ஆபரேஷன் சிந்தூரை சந்தித்தோம்.
டாலருக்கும், அமெரிக்க மேலாதிக்கத்துக்கும் சவால் விடப்படுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போட்டியில், மிகவும் மதிப்புமிக்க ஒரு சொத்து இந்திய தரவுகள் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா வல்லரசாக தொடர விரும்பினால், டாலரைப் பாதுகாக்க விரும்பினால், அதற்கான வழி இந்தியர்கள் தான். மக்கள் தொகை கூடுவது சுமை என்றும், பேரழிவு என்றும் பலர் சொல்கின்றனர். ஆனால், மக்கள் தொகை தான் நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய சொத்து. அது நமது பலம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து நீங்கள் (மத்திய அரசு) இந்தியாவை விற்றுவிட்டீர்கள்.
இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்று விட்டீர்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கின்றனர்.
ஒன்று தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க வழக்கு. மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ தொடர்பானது. எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சம் கோப்புகள் வெளியாகி உள்ளன” என தெரிவித்திருந்தார்.