

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை விதிமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்குவந்துள்ளது. இதன்படி, பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் அனைத்து அர்ச்சகர்களும் பாரம்பரிய மஞ்சள் நிற உத்தரீயம் (மேலாடை) அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கோயிலின் சமயக் குழுவால் இந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தினசரி பூஜை, ஆரத்தி உள்ளிட்ட சடங்குகளை நடத்தும் அர்ச்சகர்கள், தையல் இல்லாத மஞ்சள் நிற உத்தரீயத்தை அணிய வேண்டும். இது கோயிலில் பின்பற்றப்படும் வைஷ்ணவ மரபு மற்றும் ராமானந்தாச்சார்ய பரம்பரையின் (வைஷ்ணவ சமய குருவால் தொடங்கப்பட்ட ஆன்மிக பரம்பரை) அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஜூலனோத்சவ (ஊஞ்சல்) விழாவின்போது இந்தப் புதிய உடை முதன்முறையாகப் பொதுவெளியில் தெளிவாகக் காணப்பட்டது. மஞ்சள் நிற உத்தரீயம் அணிந்த அர்ச்சகர்கள், வேத மந்திரங்களுடன் சடங்குகளை நடத்தி, ராம்லல்லாவின் உற்சவ மூர்த்தியை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இந்த ஒருங்கிணைந்த உடை சமய ஒழுங்கையும், அர்ச்சகர்களின் ஆன்மிக அடையாளத்தையும் வலுப்படுத்தும் என கோயில் அதிகாரிகள் கருதுகின்றனர். கூடுதல் விதிமுறைகள் படிப்படியாக வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.