

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அரசியலுக்கு வந்தது தவறு என்றும் ஊழல் செய்யவில்லை என்றும் அவர் எழுதிய குறிப்பு கிடைத்திருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் ராம்புர்ஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2001 முதல் 2026 வரை தொடர்ந்து 5 முறை திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆஷிஷ் பானர்ஜி (74). மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் அமைச்சராகவும், சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், பிர்பூம் நகரில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள திரிணமூல் கட்சியின் அலுவலகத்தில் நேற்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போது காவல் துறையினர் அவர் எழுதியதாக நம்பப்படும் கையெழுத்துப் பிரதியை அங்கிருந்து கைப்பற்றினர்.
வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒரு பக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது மரணத்துக்கு யாரும் பொறுப்பல்ல. நான் எப்போதுமே ஊழலில் ஈடுபட்டதில்லை. எந்தவொரு வேலைக்காகவும் யாரிடமும் பணம் வாங்கியது இல்லை. திரிணமூல் கட்சிக்குள் நடந்த சில தவறுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனாலும் அவற்றுக்கு எதிராக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை.
தாராபித்-ராம்புர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் டெண்டர் தொடர்பான முடிவுகள், காசோலை வழங்குதல், திட்ட ஒப்புதல்கள் அல்லது தடையில்லா சான்றிதழ் வழங்கியதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. என்னை களங்கப்படுத்த எடுக்கப்பட்ட செயல்களை நான் கண்டிக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது தவறு என்று இன்று உணர்கிறேன். வருங்காலத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மம்தா கண்டனம்
ஆசிஷ் பானர்ஜி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, சில நாட்களாக துன்புறுத்தப்பட்டதாகவும், பொதுச்சேவைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்றும் திரிணமூல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.