

புதுடெல்லி: புதிய தலைமை தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் தலைமைத் தகவல் ஆணையராக (சிஐசி) இருந்த ஹிராலால் சமாரியா, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஓய்வு பெற்றார். அந்தப் பதவி காலியாக உள்ளது. மேலும், 10-ல் 8 தகவல் ஆணையர்கள் பதவி கடந்த 2023-ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. ஆனந்தி ராமலிங்கம், வினோத் குமார் திவாரி ஆகிய தகவல் ஆணையர்களுடன் மத்திய தகவல் ஆணையம் இயங்கி வருகிறது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அறையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் தலைமை தகவல் ஆணையர், 8 தகவல் ஆணையர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது இந்தப் பதவிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிலரது பெயர்களை பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை முன்னாள் செயலாளர் ராஜ் குமார் கோயல் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல, ரயில்வே வாரிய முன்னாள் தலைவர் ஜெயா வர்மா சின்ஹா மற்றும் சட்ட நிபுணரும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் உறுப்பினருமான சுதா ராணி ரெலங்கி ஆகிய 2 பெண்கள் உட்பட 8 தகவல் ஆணையர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது
தவிர, இந்திய வனத்துறை முன்னாள் அதிகாரி குஷ்வந்த் சிங் சேத்தி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்வாகத் தாஸ், மூத்த பத்திரிகையாளர் பி.ஆர்.ரமேஷ், சமூக நீதித் துறை முன்னாள் செயலாளர் சுரேந்திர சிங் மீனா, அஷுடோஷ் சதுர்வேதி மற்றும் சஞ்சீவ் குமார் ஜிண்டால் ஆகிய 6 பேர் புதிய தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் நாளை பதவியேற்றுக் கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே ஒரு பெண் (ஆனந்தி ராமலிங்கம்) இப்பதவியில் இருப்பதால் பெண்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல, கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் மத்திய தகவல் ஆணையம் முழு உறுப்பினர்களைக் கொண்டதாக (10) செயல்பட உள்ளது.