வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியம்

வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியம்
Updated on
1 min read

புவனேஸ்வர்: தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத், பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தபோது அவரது தனிச் செயலாளராகப் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ்-ன் மனைவி சுஜாதா ராவத் ஐஏஎஸ் இன்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான ஷங்கா பவனில் நடைபெற்ற எளிய நிகழ்வில் சுஜாதா ராவத் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டை அணிவித்து நவீன் பட்நாயக் வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ராவ், நீண்ட நிர்வாக அனுபவம் கொண்டவர். பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டவர். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். அவரை பிஜு ஜனதா தளம் கட்சிக்கு வரவேற்கிறேன். எளிய உறுப்பினராக அவர் இணைந்துள்ளார். தனது இந்த புதிய பொறுப்பில் தனது அனுபவத்தின் மூலம், மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்தார்.

சுஜாதா ராவத்தின் வருகை காரணமாக கட்சித் தலைமையில் உடனடி மாற்றம் நிகழாது என்பதை நவீன் பட்நாயக் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், “அடுத்த தேர்தலுக்கு கட்சியை நான் வழிநடத்துவேன். இதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா ராவத், “கடந்த 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக்கின் தலைமையின் கீழ் பணியாற்றி, ஒடிசா மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை பெற்றேன். தற்போதும் அவரது தலைமையின் கீழ் மாநிலத்தின் நலனுக்காகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். ஜெகன்னாதர் அருளாளும், ஒடிசா மக்களின் ஆசியாலும் ஒடிசாவுக்காகவும் அதன் மக்களுக்காகவும் முழு அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ராவத் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஐக்கியம்
“இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை இந்த நாள் நினைவூட்டுகிறது” - பிரதமர் மோடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in