“இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை இந்த நாள் நினைவூட்டுகிறது” - பிரதமர் மோடி

அரசியலமைப்பு படுகொலை தினத்தை ஒட்டி பதிவு
“இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை இந்த நாள் நினைவூட்டுகிறது” - பிரதமர் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: “நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட இந்த நாள், இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிறப்பித்தார். அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “அரசியலமைப்பு படுகொலை தினம் என்பது இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது. அவசரநிலையை எதிர்த்த அனைத்து சான்றோர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.

சுதந்திரத்தின் மூலமே மகிழ்ச்சி கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே உன்னத நிலையை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே நிறைவு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலமே மிக உயர்ந்த நிலையை எட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு படுகொலை தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1975, ஜூன் 25 என்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். அப்போது இந்திரா காந்தியும் காங்கிரஸ் கட்சியும் அதிகாரத் திமிருடன் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா, பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை நசுக்க முயன்றன. அரசியலமைப்பு படுகொலை தினமான இன்று, நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க அவசரநிலைக்கு எதிராகப் போராடிய ஜனநாயகப் போராளிகள் அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்பு சட்ட படுகொலை தினம் என மோடி அரசு அனுசரிப்பதன் நோக்கம், இந்த இருண்ட அத்தியாயத்தை நாட்டின் நினைவில் நிலைநிறுத்துவதும், எதிர்காலத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருபோதும் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது என்பதை உறுதி செய்வதுமே ஆகும்” என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “1975-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி, இந்திய ஜனநாயக வரலாற்றில் நாடு அவசரநிலையைச் சந்தித்த ஒரு இருண்ட நாளாகும். அதிகார மமதையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். மாற்றுக்கருத்துகள் ஒடுக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில், அரசியலமைப்பின் விழுமியங்களையும் ஜனநாயக மரபுகளையும் பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஜனநாயகம் மீதான அந்தத் தாக்குதலை வருங்கால சந்ததியினர் ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக, இந்நாளை 'அரசியலமைப்பு படுகொலை நாளாக' அனுசரிக்க முடிவு செய்ததன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அந்த இருண்ட அத்தியாயத்தை நினைவூட்டியுள்ளார். ஜனநாயகம், குடிமை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது. அரசியலமைப்பு என்பது நமது நாட்டின் மிகப்புனிதமான நூல், நமது ஜனநாயகக் குடியரசின் வலுவான அடித்தளம் என்பதையும், அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

“இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்டதை இந்த நாள் நினைவூட்டுகிறது” - பிரதமர் மோடி
“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்” - பி.ஆர்.பாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in