

தர்மேந்திர பிரதான்
புதுடெல்லி: தற்போதைய சூழ்நிலையை தேச விரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்களின் நலனுக்காகவும் கல்வி சீர்திருத்தத்துக்காகவும் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். அனைவரையும் உள்ளடக்கிய, தொலைநோக்குப் பார்வை கொண்ட வலுவான கல்வி முறையே வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நம்புகிறேன். இளைஞர்களின் லட்சியங்கள், உணர்வுகள், நியாயமான எதிர்பார்ப்புகளை நான் மதிக்கிறேன். இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நமது தார்மிகக் கடமை ஆகும்.
கடந்த மே 3 -ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு முதல் கணினி அடிப்படையில் (சிபிடி) தேர்வை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் முதல் நாளில் இருந்தே முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டேன், எந்தச் சூழ்நிலையிலும் நான் பின்வாங்கவில்லை. திறமையான மாணவர்களின் எதிர்காலம் சமூக விரோத கும்பல்களால் பாதிக்கப்படக் கூடாது. எந்தவொரு மாணவருக்கும் அநீதி நடக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். கடந்த ஜூலை 16 -ம் தேதி நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் மிகவும் வருத்தமடைகிறேன். இது எனது கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இந்தியாவின் இளைஞர் சக்தியே, நாட்டின் உண்மையான பலம். நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்கிக் கொள்ள நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
தற்போதைய சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும். ஒரு மாணவரின் எதிர்காலம்கூட சட்டச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது. நமது பிள்ளைகள் தங்கள் நேரத்தைப் படிப்பில் செலவிட வேண்டும். தொழில் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளேன்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுக்கும், தொடர்ச்சியான ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கு சேவை செய்வதே எனது வாழ்வின் லட்சியம். இளைஞர்களின் லட்சிய கனவுகளை நிறைவேற்றுவதற்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.