

பெங்களூரு: பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று முறையாக அகற்றப்படாத குப்பைகள். இதனால் நகரங்கள் பலருக்கு நரகமாகும். இந்நிலையில், இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூருவில் ‘Namma Kasa’ மூலம் புதிய முயற்சியை ஜோதிஷ் என்ற இளைஞர் தொடங்கியுள்ளார்.
இந்த தளம் மூலம் பெங்களூருவின் 243 வார்டுகளில் வசிக்கும் மக்கள் மட்டுமே இப்போதைக்கு தங்களது புகார்களை தெரிவிக்க முடியும். 30 விநாடிகளில் இதை செய்யலாம் என ஜோதிஷ் சொல்லியுள்ளார். இந்த தளத்தின் மூலம் பயனர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எதுவும் தெரிவிக்காமல், தங்கள் இடத்தில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பையை அகற்றுவதற்கான புகாரை தெரிவிக்கலாம். இந்த தளம் கிரவுட்சோர்சிங் முறையில் இயங்குகிறது.
இதில் புகார் தெரிவிக்க விரும்புவோர் தங்களது லொகேஷனை இந்த தளம் அக்சஸ் செய்வதற்கான அனுமதியை தர வேண்டும். அதைத் தொடர்ந்து குவிந்திருக்கும் குப்பையை செல்போனில் படம் பிடித்து இந்த தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த இடம் பெங்களூருவின் எந்த வார்டில் உள்ளது, குப்பையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாளர்களான பெருநகர பெங்களூரு மாநகராட்சியின் அதிகாரிகள், அந்த வார்டை உள்ளடக்கி உள்ள சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் யார் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புகார் தயாராகிறது.
அந்த புகார் சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது குறித்தும் இதிலேயே தெரிவிக்கலாம். அதன் பின்னர் அது ‘Resolved ரிப்போர்ட்’ என மாற்றப்படுகிறது. இதை அப்படியே பெருநகர பெங்களூரு மாநகராட்சிக்கு நேரடியாகப் புகார் தரும் அம்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமுதாயத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஜோதிஷ் தெரிவித்தார். இந்த தளத்தை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்துள்ளார். இதை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார். தினசரி பெங்களூரு நகரவாசி எதிர்கொள்ளும் விரக்திதான் இதை வடிவமைக்க காரணம் என அவர் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இந்த தளம் செயல்பாட்டுக்கு வந்தது. இதை மற்ற நகரங்களுக்கு விரிவு செய்யும் யோசனை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.