

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகரிடம் இண்டியா கூட்டணி சார்பில் கனிமொழி எம்.பி வழங்கினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை மீது தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானத்தைக் கொண்டு வரவும் திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான கடிதத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வழங்கினார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்தக் கடிதத்தில் 107 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் திமுக சார்பில் வழங்கப்பட்டது. அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிபதி சுவாமிநாதன் வழக்குகளை கையாள்வதாக இண்டியா கூட்டணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.