

பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், பெரும்பான்மை ஆதரவினைப் பெற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அதேவேளையில், மக்கள் செல்வாக்கை இழந்த தலைவர்களின் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸ் முதலிடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம், பல்வேறு நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்று அதாவது 70 சதவீத மக்களின் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் 63 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்தையும், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரே பாபிஷ் 55 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மறுபுறம், ஜெர்மனி பிரதமர் பிரெடரிக் மெர்ஸின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று அந்த நாட்டு மக்களில் சுமார் 76 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் செல்வாக்கு குறைந்த தலைவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 75 சதவீத மக்களின் அதிருப்தியைப் பெற்று, செல்வாக்கு குறைந்த தலைவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஈரான் உடனான போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 38 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.