

விபத்தில் காயம் அடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர்.
பொள்ளாச்சி: வால்பாறை மலைப்பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மன்னா நகரைச் சேர்ந்த 12 பேர், கோடை விடுமுறையையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறைக்கு வேன் மூலம் சுற்றுலா வந்தனர். வேனை முஹம்மது பாசித் என்பவர் ஓட்டினார்.
இரு நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு வந்த இவர்கள், பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் கேரளா திரும்புவதற்காக வேனில் புறப்பட்டனர்.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்ற வேன், அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி 800 அடி பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், வேனில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 ஆண், 7 பெண்கள் என 9 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
படுகாயங்களுடன் நவுஷாத் (39), ஷஹாதீன் (11), மஸ்னீன் (10), ஓட்டுநர் முஹம்மது பாசித் (21) ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் வேன் முழுவதும் அப்பளம்போல நொறுங்கியது.
விபத்து குறித்து அறிந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் விபத்து நடந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து, மருத்துவக் குழுவினர் மற்றும் உதவிகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.
போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்டவிசாரணையில், சுற்றுலா வேனில் வந்தவர்கள், தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் எனதெரியவந்தது.
அவர்களில் அஜிதா (54), ரம்லா (52), ஜுஹ்ரா (43), ஆஷா (41), மஜீத்(43), சாஜிதா (45) ஷகீலா (37), ருகியா (39), ஹிஷாம் (12)ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மலப்புரம் பகுதியில் இருந்து வால்பாறைக்கு 13 பேர் வேனில் சுற்றுலா வந்துள்ளனர்.
வேன் விபத்தில் சிக்கியதில் 7 பெண்கள்உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து மலப்புரம்மாவட்ட எஸ்பி மூலம் சுற்றுலா வந்தவர்களின் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து வால்பாறை அருகே உள்ள காடம்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.