

புதுடெல்லி: மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக பிரான்ஸ், மலேசியா, ஓமன், ஜோர்டான் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போரால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல்நயான், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரான்ஸ் அதிபருடன் கலந்து பேசினேன். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும்.
போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை, ராஜ்ஜியரீதியான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அங்கு அமைதியை ஏற்படுத்த நானும், பிரான்ஸ் அதிபரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனும் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட வலைதளப் பதிவில், ‘ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
ஓமனில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக சகோதரர் ஹைதம் பின் தாரிக்குக்கு நன்றி தெரிவித்தேன். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவுடன் ஓமனும் உறுதுணையாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடியின் சமரச முயற்சி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது. இதன்படி
இரு தரப்பிலும் பிரதமர் மோடியால் மட்டுமே ராஜ்ஜியரீதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
“இந்தியா மிகப்பெரிய நாடு. இஸ்ரேல், ஈரான் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினால் போரை நிறுத்த முடியும்” என்று இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக முன்னாள் தூதர் ஹசன் மிர்ஸா தெரிவித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி சமரச முயற்சியை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாகவே பல நாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.