“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
Updated on
2 min read

புதுடெல்லி: “நரேந்திர மோடியும், அமித் ஷாவும்; பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் துரோகம் செய்யும் அமைப்புகள். ஏனெனில், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டையே விற்றுவிட்டார்கள்” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தரப்பிரதேசத்தின் வீர பாசியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இதனைத் தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர், “மறைந்த தலைவர்களான வீர பாசியும், அம்பேத்கரும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். ஒவ்வொரு குடிமகனும் சமமானவர் என்றும் இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்றும் அவர்கள் கூறினர். இந்த நாடு ஏதோ ஒரு சாதிக்கோ, அமைப்புக்கோ மட்டும் சொந்தமானது அல்ல. நாட்டின் அரசியலைமைப்பும் இதையே வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு என்பது இந்திய மக்களின் குரல். அந்த அரியலமைப்பை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. பாஜக - ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்போதெல்லாம் உங்கள் முன்பாக நரேந்திர மோடி குறித்தும் அமித் ஷா குறித்தும் பேசுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் துரோகிகள் என்பதை வெளிப்படையாகக் கூறுங்கள். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் துரோகிகள். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் துரோகம் செய்யும் அமைப்புகள். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டையே விற்றுவிட்டார்கள். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நமது அரசியலமைப்பின் மீதும், வீர பாசி, மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளன.

அரசியலமைப்பு என்பது ஏதோ ஒரு சாதாரணப் புத்தகம் அல்ல. அம்பேத்கர், காந்தி, வீர பாசி ஆகியோரின் ரத்தத்தில் எந்த கொள்கைகள் ஊறி இருந்ததோ அவற்றின் தொகுப்புதான் அரசியல்சாசனம். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை மிதித்து துவைக்கின்றன; அதை சின்னாபின்னமாக்குகின்றன. அம்பேத்கர் சிலை முன்பு நாம் தலைவணங்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அரியலமைப்பை பாதுகாப்பதும் முக்கியமாகும்.

தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர்கள், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துங்கள் என்று நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு கூறி இருக்கிறார். இவற்றைக் கூறிய மோடி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் ஏறி வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இதையெல்லாம் பொதுமக்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். நாட்டில் ஒரு பொருளாதார புயல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடுமையான பணவீக்கம் ஏற்படும், அனைத்துப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும். அதோடு, உரங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்படும்.

வர இருக்கும் காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கப் போகின்றன. நாடு இதுவரை கண்டிராத அளவுக்கு விலைவாசி உயர்வு ஏற்படப் போகிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட இருப்பதால், விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபடும். ஆனால், இந்த பொருளாதார புயலின் தாக்கம் அதானி, அம்பானி, மோடி ஆகியோரை சிறிதும் பாதிக்காது. அவர்கள் தங்கள் ஆடம்பர மாளிகைக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பொருளாதாரப் புயலால் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய மக்கள்தான்” என தெரிவித்தார்.

“மோடியும், அமித் ஷாவும் நாட்டை விற்ற துரோகிகள்” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
“இந்தியா - இத்தாலி உறவு மேலும் ஆழப்படுத்தப்படும்” - மோடி, மெலோனி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in