

மத குரு முன்தாசிர் ஆலம்
ஹமிர்பூர்: உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதி வளாகத்திற்குள் 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அங்கு பணியாற்றி வந்த மத குருவுக்கு (மவுலானா) போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ரூ.26,000 அபராதம்: அரசுத் தரப்பு வழக்கறிஞர் ருத்ர பிரதாப் சிங் இது குறித்து தெரிவிக்கையில், “குற்ற வாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த குற்றத்தில் ஈடுபட்ட முன்தாசிர் ஆலம் என்பவருக்கு ரூ.26,000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி அனில் குமார் கர்வார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்" என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி காலை, குராரா காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியும், அவரது 10 வயது தம்பியும் வழக்கமான மதப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காக அந்த கிராமத்தில் உள்ள மசூதிக்குச் சென்றுள்ளனர். அங்கு மவுலானா முன்தாசிர் ஆலம் அவர்களுக்குப் பாடம் நடத்தி வந் துள்ளார்.
அன்று வகுப்புகள் முடிந்ததும், மற்ற குழந்தைகளை மவுலானா சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பின்னர், சிறுமியின் தம்பியை மசூதிக்கு வெளியே சென்று பாத்திரங்களைக் கழுவுமாறு கூறியுள்ளார். அதே நேரத்தில், சிறுமியை மசூதியின் தரையைப் பெருக்குமாறு கட்டளையிட்டு உள்ளார்.
சிறுமியைக் தனியாகப் பின்தொடர்ந்த முன்தாசிர் ஆலம், அவளைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுமி, வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் நடந்த கொடுமைகளைக் கூறி அழுதுள்ளார்.
இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த சிறுமியின் மாமா, உடனடியாக சிறுமியை குராரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறையான புகார் அளித்தார். புகாரைப் பெற்ற உள்ளூர் காவல்துறை, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்தே குற்றவாளி தனது வாழ் நாளின் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் ஆயுள் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது.