

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
பெங்களூரு: கார்நாடக மாநில முதல்வராக கடந்த 3-ம் தேதி டி.கே.சிவகுமார் பதவியேற்றார். இந்த சூழலில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் இருவர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருந்த சித்தராமையா, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து கடந்த வாரம் டி.கே.சிவகுமார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக 13 பேர் பதவியேற்றனர்.
இந்த சூழலில் கடந்த வாரம் அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். மூத்த அமைச்சரான அவருக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ராஜினாமா செய்தார். இது முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடியாக அமைந்தது. இருப்பினும் அமைச்சர் ராமலிங்க ரெட்டியை சமாதானம் செய்தார் டி.கே.சிவகுமார். அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை ராமலிங்க ரெட்டி திரும்ப பெற்றார்.
அமைச்சர்கள் அதிருப்தி: இந்த நிலையில் டி.கே.சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகா காரணமாக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் பெங்களூரு வளர்ச்சி துறையை பெற்ற அமைச்சர் கிருஷ்ணா கவுடா, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா தொடர்பாக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையை அணுக அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்.
இதேபோல காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல்வர் டி.கே.சிவகுமார் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.