கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள் என்னை கொல்ல வேண்டியிருக்கும்” என்று பாஜகவுக்கு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சுமார் 60 பேர் ரிதப்ராதா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், 20 எம்எல்ஏக்கள் திரிபுராவைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத என்சிபிஐ கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாக பிளவுபட்டுள்ளது. இதனால், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக அராஜகமான முறையில் செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் தாக்குதல்களையும் அவமானங்களையும் எதிர்கொண்டுள்ளனர் நீங்கள் யாரைத்தான் தாக்கவில்லை? மஹுவா மொய்த்ரா, அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோரைத் தாக்கினீர்கள். எனது வீட்டையும் தாக்கினீர்கள். என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள் என்னை கொல்ல வேண்டியிருக்கும்.
எனது சகாக்கள் பலர் காவல்நிலையங்களில் வாடுகிறார்கள். வெறும் தரையில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் இடுப்பில் கயிறு கட்டப்பட்ட நிலையிலும், சிலர் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்ட நிலையிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். சிலரின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டுள்ளன.
மேலும் சிலர் மீது அருவருப்பான பொருட்கள் வீசப்பட்டுள்ளன. இதை குறிப்பிடுவதே அவமானகரமானது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஒடுக்குவதற்கான அத்தனை முயற்சிகளிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் போராட்டம் தொடரும். அது எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது.
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை நிறுத்தப்பட்டுள்ளது. பாஜக அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது வங்கத்தின் கலாச்சாரம் அல்ல. நாங்களும் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். ஆனால், காவல்துறை மூலம் இதுபோன்ற செயல்களை நான் ஒருபோதும் செய்ய வைத்ததில்லை. பள்ளி மாணவர்களின் தேவையைவிட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே பாஜக அரசு முன்னுரிமை அளிக்கிறது.” என குற்றம் சாட்டினார்.