

மும்பை: மகாராஷ்டிராவில் 2 நகராட்சி தலைவர் தேர்தலில், காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், 60 உறுப்பினர்களைக் கொண்ட அம்பர்நாத் நகராட்சிக்கு கடந்த டிசம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சிவசேனா (உத்தவ்) 27 இடங்களில் வெற்றி பெற்றது.பெரும்பான்மைக்கு 4 இடங்கள் குறைவாக இருந்தது. இந்நிலையில், 14 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் தேஜஸ்ரீ கரஞ்சுலே பாட்டீல், காங்கிரஸ் (12), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 4, 2 சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதுபோல 35 உறுப்பினர்களைக் கொண்ட அகோட் நகராட்சித் தேர்தலில், பாஜக 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் (2) உட்பட இதர கட்சிகளின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “நகராட்சித் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்த உள்ளூர் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, “அகோட் மற்றும் அம்பர்நாத்தில் நடந்தவை பாஜகவின் அற்பத்தனமான நடத்தையைக் காட்டுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்ற அந்த கட்சி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்கும்” என்றார்.
12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: இந்நிலையில், அம்பர்நாத் நகராட்சி தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த 12 உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்து உள்ளது.