

ராகுல் காந்தி
புதுடெல்லி: சாதி, இனப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
சாதிப் பாகுபாடு காரணமாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் ரோஹித் வேமுலா கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 17-ல் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய 10-வது நினைவு தினத்தையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:
ரோஹித் இறந்து 10 ஆண்டுகளான பின்னரும் நிலைமை மாறவில்லை. ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் அதே நிலைமைதான் நீடிக்கிறது. அதே வன்முறை, அதே பாகுபாடு நீடிக்கிறது. கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு ஒரு குற்றமாக மாற வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சாதி, இனப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் அரசுகள், சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களை விரைவில் கொண்டு வரவுள்ளன. அதைப் போல நாடு முழுவதும் சட்டம் வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ம.பி.யில் ஆறுதல்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை, ராகுல் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் கூறும்போது, ‘‘மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதும் மாசுபாட்டைக் குறைப்பதும் மாநில அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் மாநில அரசோ இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை. இந்தூரில் ஏற்பட்ட குடிநீர் பேரழிவுக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.