

சுனேத்ரா பவார்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள சுனேத்ரா இன்று (31-ம் தேதி) மாலை 5 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கலால், விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிப்ரவரி 7-ம் தேதி புனே ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் என்சிபி-யின் மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரின் பெயரை இந்த பதவிக்கு பரிந்துரைத்தனர். பவார் குடும்பத்தினரிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இந்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
சுனேத்ரா துணை முதல்வராக பதவியேற்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பால் கூறினார். இன்று நடைபெற உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடக்க உள்ளதால், நிதித்துறையை தற்காலிகமாக முதல்வர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசியவாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.