பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் - யோகி அரசு ஒப்புதல்

பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் - யோகி அரசு ஒப்புதல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்த சுமார் 12,000 குடும்பங்களுக்கு நிலம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா கூறுகையில், “தகுதிவாய்ந்த குடும்பங்கள், ஒரு ஏக்கர் வரையிலான நிலத்தின் மீது உரிமை பெறத் தகுதியுடையவர்கள். அந்த நிலம் களத்துமேடுகள், மேய்ச்சல் நிலங்கள், நீர் நிலைகள் போன்ற வகைகளின் கீழ் வரக்கூடாது. நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த உரிமை வழங்கப்படும். இதற்காக, உத்தரப் பிரதேசத்தின் வருவாய்க் குறியீடு சட்டத்தில் இரண்டாவது திருத்தம் செய்யப்படும்.

2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள், பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மறுவாழ்வு பெற்றவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இடம் பெயர்ந்து, பிலிபித், லக்கிம்பூர் கேரி, ராம்பூர் மற்றும் பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் குடியேறிய 12,380 இந்து குடும்பங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் பயனடைய உள்ளனர்.

நிலம் பெறுபவர்களின் விவரங்களின்படி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 2,350 குடும்பங்களும், பிலிபித் மாவட்டத்தில் 4,000 குடும்பங்களும் பலனடைகின்றனர். பிஜ்னோர் மாவட்டத்தில் 3,856 குடும்பங்களும், ராம்பூர் மாவட்டத்தில் 2,174 குடும்பங்களும் பயனடைய உள்ளனர்.

நிலம் பெறுபவர்கள் உத்தரப் பிரதேசத்தில் சுமார் 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நில உரிமை இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக விவசாயத்திற்கான வங்கிக் கடன்களைப் பெறுவதிலும், அரசு கொள்முதல் நிலையங்களில் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதிலும் இவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

முன்னாள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்கதேசம்) இடம்பெயர்ந்து வந்த இந்து பெங்காலி குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான ஒரு முன்மொழிவுக்கு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை 'பின்னேற்பு ஒப்புதல்' அளித்துள்ளது. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையின் இந்த முடிவின்படி, மீரட் மாவட்டத்தின் மவானா தாலுகா பகுதியைச் சேர்ந்த 99 குடும்பங்கள் பலனடைகின்றனர்.

பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் - யோகி அரசு ஒப்புதல்
தற்காலிக போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720 உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in