

பெங்களூரு: கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த பெண் 4 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாடபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (36). மென்பொருள் பொறியாளரான இவர் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், வன புகைப்பட கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தண்டியாண்டமோல் மலைப்பகுதிக்கு தன் குழுவினர் 7 பேருடன் மலையேற்றத்துக்கு சென்றார்.
அன்று மாலை 6.30 மணியளவில் தண்டியாண்டமோல் மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தபோது வழக்கமான மலையேற்ற பாதையை சரண்யா தவறவிட்டார். அவருடன் மலையேற்றம் சென்றவர்கள் விடுதிக்கு திரும்பிய நிலையில் சரண்யா மட்டும் திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யாவின் நண்பர்கள் குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் வன கண்காணிப்பு அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து சரண்யாவை மீட்க வன கண்காணிப்பு காவலர்கள் மற்றும் நக்சல் ஒழிப்பு படையை சேர்ந்த 10 பேர் கொண்ட மீட்பு குழுவை அமைத்தனர்.
இந்த குழு கடந்த 4 நாட்களாக குடகு மலைப் பகுதிகளில் பல்வேறு திசைகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலையில் குடகு வனப்பகுதியில் உள்ள ஓடையின் அருகே குகையில் இருந்த சரண்யாவை பத்திரமாக மீட்டனர்.
நான் பயப்படவில்லை: இது குறித்து சரண்யா கூறுகையில், "கடந்த 2ம் தேதி மாலையில் இருந்து என்னால் முடிந்த வரை வழியை தேடி நடந்துக்கொண்டே இருந்தேன். செல்போனில் சார்ஜும், டவரும் இல்லாததால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. எனக்கு காட்டின் இருட்டும், யானை போன்ற விலங்குகள் மீது எந்த பயமும் இல்லை.
எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் நடந்து கொண்டே இருந்தேன். காட்டாறுகளில் பாய்ந்த நீரை குடித்து, அங்கு கிடைத்த பழங்களை தின்று 4 நாட்கள் தெம்பாகவே இருந்தேன். அடிக்கடி கன மழை கொட்டி தீர்த்ததால் எனது உடைகள் எல்லாம் நனைந்துவிட்டன. அதனால் மிகவும் குளிராக இருந்தது. மற்றபடி எனக்கு அச்சம் என்பதே இருக்கவில்லை" என தைரியமாக கூறினார்.
சரண்யாவின் துணிச்சலை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், வனத்துறை அமைச்சர் ஈஷ்வர் காண்ட்ரே உள்ளிட்டோர் பாராட்டினர். சித்தராமையா கூறுகையில், "அந்த பெண்மணி மிகவும் துணிச்சலானவராக தெரிகிறார். அவரது குரலில் எந்த பயமும் இல்லை. அவரை செல்போனில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். கேரள மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் பத்திரமாக கொண்டுபோய் விடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.