

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், மார்க்ஸிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.
காலை 9.30 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 70 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 65 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் மார்க்சிஸ்ட் 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.