

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில், காசி தமிழ்ச் சங்கமம் 4.0 (கேடிஎஸ்) நிகழ்ச்சி நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்(பிஎச்யூ) மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து நடத்துகின்றன.
காசி மற்றும் தமிழகத்தின் பண்பாடு, ஆன்மிகம் மற்றும் வரலாற்றுத் தொடர்புகளின் நிகழ்ச்சிகளை அழகாகப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சங்கமம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 2 முதல் 15-ம் தேதி வரை பிஎச்யூ, ஐஐடி இணைந்து பல்வேறு தலைப்புகளில் கல்வி அமர்வுகளை நடத்துகின்றன.
தமிழ் கற்கலாம்: இதுகுறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிஎச்யூ துணை வேந்தர் பேராசிரியர் அஜித் குமார் சதுர்வேதி கூறும்போது, ‘‘கடந்த 2022-ல் முதலாவது காசி தமிழ்ச் சங்கமம் தொடங்கியது. அதில் இருந்து பிஎச்யூவின் பங்களிப்பு பெருமை அளிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் அறிவைப் பெறவும், தங்கள் ஆன்மிக நிலையை மேம்படுத்தவும் காசிக்கு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பல்வேறு வழிகளில் அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்க ஒரு விரிவான திட்டத்தை பிஎச்யூ தயாரித்துள்ளது. இதன் கருப்பொருளாக ‘தமிழ் கற்கலாம்’ என்பதை முன்வைத்துள்ளோம். இந்த நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கியக் கருவியாகும். வடக்கு மற்றும் தென் மாநிலங்களை பொதுப் பாரம்பரியத்தின் மூலம் மீண்டும் இணைக்க உதவுகிறது’’ என்றார்.
கேடிஎஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து 7 குழுவினர் வர உள்ளனர். டிசம்பர் 3 அன்று ‘தமிழ்ச் சிந்தனையில் காசி: மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும் அவரது மரபுத் தொடர்ச்சி’ எனும் தலைப்பில் அமர்வில் முதல் குழுவின் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
டிசம்பர் 5-ல் ‘காசி மற்றும் தமிழகத்தின் ஆன்மிக மற்றும் தத்துவப் பாரம்பரியம்’ எனும் அமர்வில் 2-வது குழுவின் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். மூன்றாவது குழுவில் வரும் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் டிசம்பர் 7-ல் நடைபெறும் ‘காசியின் ஒருங்கிணைந்த இலக்கியம் மற்றும் பத்திரிகைத் துறையில் இந்தியா’ என்ற அமர்வில் பங்கேற்க உள்ளனர்.
டிசம்பர் 9-ல் ‘நிலைத்த உணவுப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் 4-வது குழுவினர் விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறையினர் பங்கேற்கின்றனர். டிசம்பர் 11-ல் ‘புனித நூல்கள்: காசி மற்றும் காஞ்சிபுரம் இடையிலான உரையாடல்’ என்ற அமர்வில் தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்கள் இடம்பெறுகின்றனர்.
வளமான பெண்கள்: டிசம்பர் 13 அன்று நடைபெறும் 6-வது குழுவில் ‘வளமான பெண்கள், வளமையான இந்தியா’ என்ற தலைப்பில் பெண்கள் கலந்துரையாடல் நடத்துகின்றனர். இறுதியான 7-வது குழுவில், டிசம்பர் 15 அன்று ‘தெய்வீக இணைப்பு’ என்ற தலைப்பில் செவ்வியல் இசைப் பாடகர்கள், ஆன்மிக நூல் ஆசிரியர்கள் மற்றும் பேச்சாளர்கள் பங்கேற்பர்.
இந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு சிறப்பு அம்சமாக, தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் நிபுணத்துவம் பெற்ற தமிழ் ஆசிரியர்கள் வாராணசி பள்ளிகளில் தமிழ் கற்பிக்க வருகின்றனர். வாராணசி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், பிஎச்யூவின் இந்திய மொழிகள் துறையின் தமிழ்ப் பிரிவு ஒருங்கிணைக்கிறது.
இதற்காக சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்த பாடப்புத்தகங்களின் அடிப்படையில் 50 ஆசிரியர்கள் மற்றும் 2 ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் 5 தொகுதி நூல்கள் இந்தி வழியாக தமிழைக் கற்பிக்க உதவ உள்ளது. இவர்கள் மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுத்த 50 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 1,500 மாணவர்களுக்கு 15 நாட்கள் தமிழை கற்றுத்தர உள்ளனர்.