

சுப்பா ரெட்டி
பெங்களூரு: கடந்த 2023ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்பா ரெட்டியின் வெற்றி செல்லாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கபள்ளாபுரா மாவட்டம், பாகேபள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுப்பா ரெட்டியும், பாஜக வேட்பாளராக முனிராஜுவும் போட்டியிட்டனர். இதில் சுப்பா ரெட்டி வெற்றி பெற்றார். இதற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முனிராஜு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “சுப்பா ரெட்டி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் தனக்கு சொந்தமான ரூ.1.3 கோடி சொத்துகளையும், வாகனங்களையும் மறைத்துள்ளார். வாக்குப் பதிவின் போது முறைகேட்டில் ஈடுபட்டு 19,179 வாக்குகளை பெற்றுள்ளார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும். தேர்தலில் 2-வது இடம் பெற்ற என்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில்,”சுப்பா ரெட்டி வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து மதிப்புக்கும் வருமான வரித்துறையில் அவர் தாக்கல் செய்த கணக்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அவரின் சொத்து மதிப்பு, நகைகளின் மதிப்பு உள்ளிட்டவை தவறாக காட்டப்பட்டுள்ளன.
பொய்யான தகவல்களை தெரிவித்ததால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கிறேன். சுப்பா ரெட்டி தேர்தலில் முறைகேடு செய்து 19,179 வாக்குகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டு தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. எனவே முனிராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.