புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கை அமெரிக்காவை சமாதானப்படுத்துவதாகவும், சீனாவிடம் சரணடைவதாகவும் உள்ளது” என்று மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா உடனான இந்தியாவின் சரக்கு வர்த்தக உபரி கடந்த 2024-25 நிதி ஆண்டில் 40.1 பில்லியன் டாலராக இருந்தது. அது, 2025-26 நிதி ஆண்டில் 34.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதேபோல், சீனா உடனான இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் 99.2 பில்லியன் டாலராக இருந்தது. 2025-26ம் நிதி ஆண்டில் இது 112.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கை என்பது அமெரிக்காவை சமாதானப்படுத்துவதாகவும், சீனாவிடம் சரணடைவதாகவும் உள்ளது” என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதவில், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “90 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நிலைகுலைந்து போயுள்ளன.
ஆனால், மோடி அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அதோடு, மாணவர்களின் குரலை பயங்கரவாதம் என முத்திரை குத்துகிறார். விவசாயிகளை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வாழ்வோர் என்றும் ஒட்டுண்ணிகள் என்றும் நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி இழிவுபடுத்தியதை நாடு இன்னும் மறக்கவில்லை. இந்த அரசை யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். மாணவர்களின் குரல் நாடு முழுவதும் உரக்க ஒலிக்கும்; மோடி அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியே தீர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.