

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ ) உருவாக்கியுள்ள அனைத்து வகையான மரபுசார் ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தித் தொழில்நுட்பத்தை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு வழங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்நாட்டிலேயே ஏவுகணை உற்பத்தியை விரைவுபடுத்தவும், பாதுகாப்புத் தேவைகளுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தகுந்த தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு உட்பட்டு டிஆர்டிஓ உருவாக்கிய ஏவுகணைகளை தயாரிக்கத் தகுதியுள்ள இந்திய நிறுவனங்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் வழங்கப்படும்.
இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உற்பத்தியில் தனியார் துறையை ஈடுபடுத்துவது குறித்து மத்திய அசு பரிசீலித்து வருவதாக கடந்த 2025 அக்டோபரில் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.