

புதுடெல்லி: 13 ஆண்டுகளில் இந்தியா கொள்கை முடக்க நிலையிலிருந்து கொள்கையை செயல்படுத்தும் வகையிலான மாற்றத்தை கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, இதே கல்லூரியில் கடந்த 2013-ல் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:
“கடந்த 2013-ல் தீவிரவாதம், ஊழல், பணவீக்கம் உள்ளிட்ட கடும் சவால்களை இந்தியா எதிர்கொண்டது. தேசத்தின் வளர்ச்சி என்பது அப்போது வீழ்ச்சியில் இருந்தது. பணவீக்கம் உச்சத்தில் இருந்தது.
ஊழல் மோசடி தேசிய அளவில் புதிய உச்சத்தை எட்டியிருந்தது. தீவிரவாதிகள் அஞ்சாமல் நடமாடினர். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி செயல்பட்டு கொண்டிருந்தது. கொள்கை அளவில் முடங்கிப்போன காலம் அது. பலவீனமான நாடுகளின் பட்டியலில் உலகம் பார்த்தது.
ஆனால், இப்போது பாருங்கள் பாகிஸ்தான் நம் தேசத்தின் தாக்குதல் முயற்சி மேற்கொண்டால் கூட தக்க பதிலடி தருகிறோம். நக்சலிசத்தை அழித்துள்ளோம். தேசத்தின் கொள்கை செயல்பாட்டுக்கு வந்துள்ளதை மக்கள் கண்டு வருகின்றனர்.
நிதியாண்டின் முதல் காலாண்டில் தேசத்தின் ஜிடிபி 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேற்காசிய போர் சூழல் மற்றும் சர்வதேச வணிக சவால்களுக்கு மத்தியில் இந்திய தேசம் இதனை எட்டியுள்ளது.
செங்கோட்டையில் (சுதந்திர தின உரையை குறிப்பிட்டு) ‘திமாகி நக்சல்’ குறித்து நான் பேசி இருந்தேன். அதை நான் சொன்னதிலிருந்து ஒவ்வொருவராக வெளிவர தொடங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
ஜன் தன் யோஜனா திட்டம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது தேசத்தின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால், 2012 முதல் சுமார் 60 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா 2014-ல் ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து வந்தது. இப்போது நாம் போன்களை தயாரித்து, சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.
இன்றைய இளைஞர்கள் ஸ்டார்ட்-அப் முயற்சி குறித்து சிந்திக்கவும், அதை செயல்படுத்தவும் முடிகிறது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய இளம் தலைமுறையினருக்கு இந்த வாய்ப்பு இல்லை” என்றார். இந்த நிகழ்வுக்கு மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.