“புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இந்திய 'ஜென் ஸி' பொறியாளர்கள்” - பிரதமர் பாராட்டு

“புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இந்திய 'ஜென் ஸி' பொறியாளர்கள்” - பிரதமர் பாராட்டு
Updated on
1 min read

புது டெல்லி: உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டுள்ள காணொலியில், "இது மாற்றத்தின் ஒரு புதிய தொடக்கமாகும். இந்த புதிய சுழற்சியில், உலக அரங்கில் இந்தியா தனது விண்வெளித் துறை சார்ந்த இருப்பை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது; இது நமது விண்வெளித் திட்டங்களில் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிபூண்டுள்ளோம். இந்த இலக்கை அடைவதில் விண்வெளித் துறை முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை சார்ந்த திறமையாளர்கள் உலக அளவில் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். இன்று, இந்தியாவின் விண்வெளித் துறை உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது.

இன்று, 'ஜென் ஸி' தலைமுறைப் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். உந்துவிசை அமைப்புகள், செயற்கைக்கோள் தளங்கள் என எதுவாக இருந்தாலும், சில காலத்திற்கு முன்பு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத துறைகளில் இப்போது இந்திய இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இஸ்ரோவின் வெற்றியைக் காணும்போது, ​​தாங்கள் வளரும்போது விஞ்ஞானிகளாக வேண்டும் என்று பல குழந்தைகள் நினைக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.

2023-ஆம் ஆண்டில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய நிலையில், இந்த சாதனையை செய்த முதல் நாடாக இந்தியா உருவெடுத்தது. இது நாட்டின் விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

“புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இந்திய 'ஜென் ஸி' பொறியாளர்கள்” - பிரதமர் பாராட்டு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்​பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in