

மஸ்கட்: பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில், இந்தியா - ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் ஒரு சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன். ஓமனை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினேன்.
இந்தியாவும் ஓமனும் சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை உறுதி செய்த அவரது முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயமாகும்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நான் சுல்தானுடன் விவாதித்தேன். எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், உரங்கள், சுகாதார பாதுகாப்பு போன்ற துறைகளில் நெருங்கிய உறவுகளுக்கு அதிக அளவில் சாத்தியக் கூறுகள் உள்ளது குறித்து நாங்கள் பேசினோம். கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். குறிப்பாக மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் இதில் அடங்கும்’’ என தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் கையெழுத்திட்ட வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு முன் எப்போதும் இல்லாத சந்தை அணுகலை வழங்குகிறது.
இந்த ஒப்பந்தம், ஓமனின் வரி விதிப்பு பிரிவுகளில் 98.08% பொருட்களுக்கு சுங்க வரி விலக்கை அளிக்கிறது. இது இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 99.38% ஆகும்.
ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொறியியல் பொருட்கள், பிளாஸ்டிக், விவசாய பொருட்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகள் முழுமையான சுங்கவரி விலக்கால் பயனடையும்.
இது இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தும். அதேநேரத்தில், நமது விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.