

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், எரிபொருள் போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலைத் தொடங்கின. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போர் தீவிரமடைந்து வருவதாலும், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருவதாலும் உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து செய்திகள் வெளியாகின.
மேலும், மங்களூரு சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியது: ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலை உள்ள போதிலும், கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி விநியோகம் ஆகியவற்றில் இந்தியா மிகவும் ‘வலுவான’ நிலையில் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பாதை மூலம் மேற்கொள்ளப்படும் இறக்குமதியைவிட பன்முகப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மூலம் அதிக கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் தற்போதைய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இருப்பு உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய போதுமானது.
அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் தடை ஏற்படுமானால் அதை ஈடு செய்ய மாற்று வழிகள் மூலம் விநியோகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக பன்முகப்படுத்தியுள்ளது. 2022-ல் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 0.2% மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதேநேரத்தில், அடுத்தடுத்த ஆண்டுகளில் இது 20% அளவுக்கு உயர்ந்தது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் 1.04 மில்லியன் பீப்பாய்கள்.
மங்களூரு சுத்தகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (MRPL) சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என்ற தகவல் தவறானது. MRPL சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. எல்பிஜி போதுமான அளவு கிடைப்பதை உறுதிப்படுத்த உற்பத்தியை அதிகரிக்குமாறு அனைத்து எல்பிஜி சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
எல்பிஜி இருப்பைப் பொறுத்தவரை, இந்தியா தற்போது ஒரு வலுவான நிலையில் உள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்காவிடம் இருந்தும் எல்பிஜி வரத் தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.