

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தியோ பிராங்கென் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தக உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் வர்த்தகம், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், தூய்மையான எரிசக்தி, சைபர்குற்றம் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: இன்று உலகம் பெரும் கொந்தளிப்பான ஒரு கட்டத்தைக் கடந்து செல்கிறது. உலகின் பல பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. உணவு, எரிபொருள் அல்லது விநியோகச் சங்கிலி என ஒவ்வொரு துறையையும் இந்த நிச்சயமற்ற தன்மை பாதிக்கிறது.
இந்த சவாலான சூழலிலும், இந்தியாவின் பொருளாதாரம் தனது வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார எழுச்சிப் பயணம், உலகுக்கு நம்பிக்கையின் ஆதாரமாகவும் புதிய வாய்ப்பாகவும் மாறி வருகிறது.
இந்தியாவும் பெல்ஜியமும் சட்டத்தின் ஆட்சி, பேச்சு வார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. உக்ரைனாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மோதல்களை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெல்ஜியம் பிரதமர் வெவர் கூறும்போது, “இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது ஒரு முக்கிய மைல்கல். இரு நாடுகளும் முன்பைவிட மிகவும் பரந்த மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த உறவைக் கட்டமைத்து வருகின்றன” என்றார்.