கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி

கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி

உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரக முயற்சி மூலம் தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published on

புதுடெல்லி: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில், கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது. மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது.

பயங்கரவாதம், தீவிரவாதம், தீவிர சிந்தனைகள் ஆகியவை நமக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதற்கும் பெரிய சவால்களாக உள்ளன. இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளித்து உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய நாடுகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.

உலகம் முழுவதும் உருவாகும் பதற்றங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருந்துள்ளது. இந்தியா தொடர்ந்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தி வருகிறது. இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அமைதிக்கான குரல் மேலும் வலிமை பெறும்” என தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ‘‘பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகிறது. அங்குள்ள நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய வான் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும், அந்நாட்டின் 40 முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அரசியல் தலைமைகள், ராணுவத் தளபதிகள், ஆயுத கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பதிலுக்கு, இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

<div class="paragraphs"><p>கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி</p></div>
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,600+ புள்ளிகள் வீழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in