இம்ரான் கான் | கோப்புப் படம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமுதல் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த மாதம் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கண் நோய்க்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, சிறையில் அவரைச் சந்தித்து அவரது உடல்நிலை குறித்தும் அவர் எவ்வாறு வாழ்கிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் சல்மான் சஃப்தாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 10-ம் தேதி ராவல்பிண்டி சிறைக்குச் சென்று இம்ரான் கானைச் சந்தித்த சல்மான் சஃப்தார், அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பாகிஸ்தானின் பிரபல டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘தனக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் தற்போது வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளதாக இம்ரான் கான் என்னிடம் கூறினார். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு தனக்கு இரண்டு கண்களிலும் இயல்பாக இருக்கும் 6x6 என்ற அளவில் பார்வை இருந்ததாகவும், அதன் பிறகே தனக்கு பார்வை மங்கத் தொடங்கியதாகவும் இம்ரான் கான் கூறினார். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
இம்ரான் கானுக்கு ரத்த உறைவு இருப்பது கண்டறியப்ட்டுள்ளது. இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும். ஊசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவருக்கு வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளது. மற்றபடி அவர் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்’’ என்று வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அடுத்து, வரும் 16-ம் தேதிக்கு முன்பாக இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், தனது குழந்தைகளுடன் பேச அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.