

புதுடெல்லி: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மதுபானக் கொள்கை வழக்கைத் தொடர்ந்து, ‘ஜல் போர்டு’ விவகாரம் வந்துள்ளது.
அடுத்து, 3 முக்கியத் துறைகளில் நீங்கள் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும். டெல்லியில் நடந்ததைப் போலவே, பஞ்சாப் மக்களும் உங்கள் ஆணவத்துக்கும், ஊழல் கட்சிக்கும் எதிராக இன்னும் கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள்.
நீங்களும், உங்கள் பினாமி நிறுவனர்களும் கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் என்னுடன் வைத்திருந்த தொடர்பை நினைவில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு சில விஷயங்கள் மறந்திருக்கலாம். ஆனால், எனக்கு அனைத்தும் நினைவில் உள்ளன. விரைவில் உங்களை ஆச்சரியப்படுத்துவேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.