“ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” - பிரதமர் மோடி

“ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” - பிரதமர் மோடி
Updated on
2 min read

புதுடெல்லி: ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீதும், அவர்களின் நம்பிக்கைகள் மீதும் தான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங்கின் மகன்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 -ம் தேதி வீர பாலகர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2022 -ம் ஆண்டு ஜனவரி 9 அன்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு இணங்க புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர், ‘‘வீர பாலகர் தினம் என்பது ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூருவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வணக்கத்திற்குரிய நாள். இந்த நாள் தைரியம், உறுதி, நீதி ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இன்றைய இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு வகையில் நீங்கள் அனைரும் ஜென்ஸி தலைமுறையினர். உங்கள் தலைமுறைதான் இந்தியாவை, வளர்ந்த இந்தியா என்ற இலக்கிற்கு அழைத்துச் செல்லும். ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்களையும் நம்பிக்கைகளையும் நான் காண்கிறேன், புரிந்து கொள்கிறேன். உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

யார் பெரியவர், யார் சிறியவர் என்பதை வயது தீர்மானிப்பதில்லை. உங்கள் செயல்கள் மற்றும் சாதனைகள் மூலம் நீங்கள் பெரியவர்களாக உயர்கிறீர்கள். இளம் வயதிலேயே மற்றவர்கள் உங்களிடம் இருந்து உத்வேகம் பெரும் வகையில் நீங்கள் பணியாற்ற முடியும். எனவே, வயதைப் பற்றி கவலைப்படாமல் பெரிய சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

குறுகிய கால புகழின் கவர்ச்சியில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது அவசியம். உங்கள் முன்மாதிரிகளிடம் இருந்து, நாட்டின் மாபெரும் ஆளுமைகளிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வெற்றியை உங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் கருதக்கூடாது. உங்கள் வெற்றி தேசத்தின் வெற்றியாக மாற வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

முன்பு, இளைஞர்கள் கனவு காணக்கூட பயந்தார்கள். ஏனென்றால், பழைய அமைப்புகள் எந்த நன்மையும் நடக்காது என்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கி இருந்தன. எல்லா இடங்களிலும் விரக்தியும் நம்பிக்கையின்மையும் சூழ்ந்திருந்தது. கடினமாக உழைப்பதில் என்ன பயன்? என்று கூட மக்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால், இன்று நாடு திறமைகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியால் உங்களுக்கு இணையத்தின் சக்தி கிடைத்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் துறைகளில் நுழைய விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள் உள்ளன. விளையாட்டுக்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேலோ இந்தியா திட்டம் உள்ளது.

வீர பாலகர்களான ஜோராவர் சிங், ஃபதே சிங் ஆகியோர், தாங்கள் தேர்ந்தெடுத்தப் பாதை எவ்வளவு கடினமானது என்று கருதவில்லை. அந்தப் பாதை சரியானதுதானா என்பதை மட்டுமே அவர்கள் கருதினார்கள். இன்று அதே உணர்வு நமக்குத் தேவை.

இந்தியாவின் இளைஞர்களிடம் இருந்து இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். பெரிய கனவுகளை காணுங்கள், கடினமாக உழையுங்கள், உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் தளர விடாதீர்கள். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருந்தால்தான் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அவர்களின் தைரியம், திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்தின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும்’’ என தெரிவித்தார்.

“ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” - பிரதமர் மோடி
“வங்கதேசத்துக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது” - கவனம் ஈர்த்த தாரிக் ரஹ்மானின் முதல் உரை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in