

ஹைதராபாத் நகர காவல் ஆணையர் சஜ்ஜனார்
ஹைதராபாத்: தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில், பல இடங்களில் கிரிக்கெட் சூதாட்டங்களும் இலைமறை காயாக நடைபெறுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் குறிப்பாக ஹைதராபாத்தில் பல சூதாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
நேற்று ஹைதராபாத்தில் நகர காவல் ஆணையர் சஜ்ஜனார் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது: ஐபிஎல் கிரிக்கெட்டை சிலர் மூலதனமாக்கி கோடி கணக்கில் குறுக்கு வழியில் சம்பாதித்து வருகின்றனர். கிரிக்கெட் மீதுள்ள மோகத்தால் சாமானிய மக்கள் இதில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
‘டாஸ் ஜெயிப்பது யார் ? இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்த அணி எத்தனை ரன் குவிக்கும் ? என சரமாரியாக கேள்விகளால் மக்களை முதலில் ஈர்க்கிறார்கள். அதன் பின்னர் ‘பெட்டிங்’ மூலம் பணத்தை மக்களிடம் இருந்து கறந்து விடுகின்றனர். ஆதலால் யாரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான சமூக வலைதள விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.