

பெங்களூரு: பெங்களூருவில் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பிய மனைவியை அவரது கணவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் பாலமுருகன் (40). அதே ஊரை சேர்ந்த வங்கி ஊழியர் புவனேஸ்வரியை (39) கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பணி நிமித்தமாக இருவரும் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தனர். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனும் மனைவியும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனித் தனியே வசித்து வந்தனர்.
இந்நிலையில் புவனேஸ்வரி நேற்று பணி முடிந்து மாலை 7 மணி அளவில் மாகடி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலமுருகன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தனது மனைவியை 4 முறை சுட்டார். இதனால் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த புவனேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பாலமுருகன் தானாக மாகடி சாலை காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சுட்டுக்கொன்றதாக கூறியுள்ளார். இருப்பினும் போலீஸார் அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கின்றனர்.