

புதுடெல்லி: டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா(ஜேஎம்ஐ) பல்கலைக்கழகத்தின் வினாத் தாளில், முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்த கேள்வி இடம் பெற்றது. இதற்காக அதை தயாரித்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருப்பது ஜேஎம்ஐ பல்கலைக்கழகமாகும். சிறுபான்மை அந்தஸ்து பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. பி.ஏ. ஹானர்ஸ் சமூகப்பணிப் பிரிவின் ஒரு கேள்வித் தாளில், 15 மதிப்பெண்ணுக்கான ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்தது.
அந்தக் கேள்வியில், ’பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களைப் பற்றி விவரிக்கவும்’ என மாணவர்களிடம் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது வைரலாகி சர்ச்சை கிளம்பியது.
சமூக வலைதளங்கள்: இந்த கேள்வி பாடங்களுக்கு எந்த வகையில் தொடர்புடையது என சமூகவலைதளங்களில் கேள்விகள் எழுந்தன. சமூகத்தில் அரசியல் செய்து வகுப்புவாதப் பாரபட்சம் காட்டி இருப்பதாகவும் அதில் பலர் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து, அந்தக் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் வீரேந்திர பாலாஜி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த விவகாரம் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகம் ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. அக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை, பேராசிரியர் பாலாஜியின் இடைநீக்கம் தொடரும் எனவும் ஜேஎம்ஐ பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவைக் குறிப்பிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகரான கஞ்சன் குப்தாவும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதன்பிறகு, இந்த விவகாரம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.