

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யு) விசாரித்து வருகிறது.
இந்நிலையில், என்சிடபிள்யு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணியிடத்தில் பரவலான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நிறைந்த ஆழ்ந்த கவலையளிக்கக்கூடிய, நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாசிக் டிசிஎஸ் கிளையின் முழுக் கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் வைத்திருந்தனர். அவர்கள் இளம் பெண்களைக் குறிவைத்து, அவர்களை பாலியல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்து மத நம்பிக்கைகளைத் தரக்குறைவாகப் பேசியும், பெண்களை மிரட்டியும் துன்புறுத்தியுள்ளனர். பெண் ஊழியர்களை நோக்கித் தொடர்ந்து மதம் சார்ந்த எதிர்மறையான கருத்துக்களைக் கூறி ஒரு கட்டாயமான சூழலை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக இளம் ஊழியர்கள் இத்தகைய மத எதிர்ப்புப் பேச்சுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை செயல்படவில்லை. நாசிக் கிளையில் பாலியல் வன்கொடுமை தடுப்பு (பிஓஎஸ்எச்) நடைமுறைகள் செயலற்று இருந்துள்ளன. நிறுவனத்தின் இந்தச் செயலற்ற தன்மை என்பது வெறும் விதிமீறல் மட்டுமல்ல, நிர்வாகக் குறைபாடும் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.