

அமராவதி: திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியல் ஆதாயம் ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடியாக உள்ளது.
இந்நிலையில், பல ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தான சீனியர் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிக்குமார் எனும் ஊழியர், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி நாட்டு கரன்சிகளை திருடியதாக கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோல் சுமார் ரூ.100 கோடி வரை திருடி, சொத்து சேர்த்தது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக, நேற்று ஆந்திர உயர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஏழுமலையானின் காணிக்கை பணத்தை ஏன் தரையில் உட்கார்ந்தே எண்ண வேண்டும்? மேஜை, நாற்காலி ஏற்பாடுகளை ஏன் திருப்பதி தேவஸ்தானம் செய்ய கூடாது?
மேலும், வேட்டிகளை மட்டுமே ஏன் உடுத்த வேண்டும்? இதற்கென சிறப்பு சீருடையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்யலாம் அல்லவா? என்ற கேள்விகளை உயர் நீதிமன்றம் எழுப்பியது. இதற்கு நிர்வாக அதிகாரியிடம் கேட்டறிந்து பதில் அளிப்பதாக தேவஸ்தான தரப்பு வழக்கறிஞர் கூறினார்.