

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, மீட்புப் பணிகளுக்காக இந்திய ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, குஜராத்தின் வல்சாட் மாவட்டத்தில் உள்ள உமர்காம் பகுதியில் நேற்று முன்தினம் காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,064 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே 24 மணி நேரத்தில் பதிவான 3-வது அதிகபட்ச மழைப் பொழிவு இதுவாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வல்சாட், நவசாரி, சில்வாசா மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் பொறியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய ராணுவப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.