வெறுப்பு பேச்சு, குற்றங்கள் தடுப்பு மசோதா - கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

கர்நாடக சட்டப்பேரவை

கர்நாடக சட்டப்பேரவை

Updated on
1 min read

மைசூரு: கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் இந்த மசோதாவை விளக்கிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "சமீப காலங்களில், சமூகத்தைப் புண்படுத்தும் கருத்துகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது" என்று கொலைகள், தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக பதற்றங்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.

மேலும், “வெறுப்பு என்பது மதம், சாதி மற்றும் பாலினம் அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து உருவாகிறது. எனவே அதைத் தடுக்க வேண்டியது அவசியம். புறக்கணிப்பும் பாகுபாடும் வெறும் வார்த்தைகள் அல்ல.

நான் சிறுவனாக இருந்தபோது, ​​பள்ளிக்குச் செல்லும்போது தண்ணீர் கொடுப்பதில்கூட சாதி பாகுபாடு இருந்தது. பசவண்ணரின் போதனைகள் வந்து பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும், சமத்துவம் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை. அம்பேத்கரை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பை நாம் செயல்படுத்த வேண்டும்" என்றார்.

வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா - 2025-இன் விதிகளை விளக்கிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “பேச்சுக்கள், புத்தகங்கள் அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெறுப்பைப் பரப்பும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மீது இந்தச் சட்டம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இந்த மசோதா ஏற்கெனவே வெளியிட்ட கருத்துகளுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், “இது கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய சட்டம் ஏன் தேவை. இது தனிநபர்களைக் குறிவைக்க தவறாகப் பயன்படுத்தப்படலாம். இந்தச் சட்டத்தில் பிணைக்கு எந்த விதியும் இல்லை. இந்தச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்படலாம்.

இந்த மசோதா அரசியல் கணக்குகளைத் தீர்ப்பதற்கான ஒரு பிரம்மாஸ்திரமாக மாறியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே அப்பாவி மக்களும் இச்சட்டத்தால் பாதிக்கப்படலாம். இந்தச் சட்டம் எதிர்காலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராகவே திரும்பக்கூடும்” என்று எச்சரித்தார்.

<div class="paragraphs"><p>கர்நாடக சட்டப்பேரவை</p></div>
VB-G RAM G | மக்களவையில் நிறைவேறியது ஊரக வேலை உறுதி திட்ட மசோதா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in