

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களை செய்ய வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்றுவதற்காக முன்மொழிந்தார்.
அப்போது மக்களவையில் பேசிய பேசிய சிவராஜ் சவுகான், “காந்தி எங்கள் இலட்சியம், எங்கள் உத்வேகம். மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சி காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதாரத் தத்துவத்தை தனது பஞ்ச நிச்சயத்தில் இணைத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் காந்தியின் கொள்கைகளைக் கொலை செய்கின்றன. நேற்று சபையில், இரவு 1:30 மணி வரை மரியாதைக்குரிய உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டேன். நீங்கள் உங்கள் கருத்துகளையே பேசுகிறீர்கள், எங்கள் வார்த்தைகளைக் கேட்பதில்லை; இதுவும் ஒரு வன்முறைதான்” என்று கூறினார்.
மேலும், “விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்கு லட்சியத்துக்கு இணங்க, ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டிற்கு 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதிலும், ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது” என்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதற்கு மத்தியில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை நடவடிக்கைகள் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று இந்த மசோதா மீது மக்களவையில் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த மசோதாவை 2047-க்குள் விக்சித் பாரத்தை அடைவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்று கூறி ஆதரித்தபோதிலும், இந்தச் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த மசோதாவின் கீழ், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கிராமப்புறத்தில் வசிக்கும் எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரருக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் உத்தரவாதமான வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
மாற்றங்கள் என்னென்ன?
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு 100 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கும் நிலையில், புதிய மசோதா 125 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது. இப்போதைய திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், புதிய மசோதாவின்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 60:40 என்ற விகிதத்தில் நிதி சுமையை ஏற்க வேண்டும். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் (உத்தராகண்ட், இமாச்சல், ஜம்மு-காஷ்மீர்) 10 சதவீத நிதி வழங்கினால் போதும்.
ஊரக வேலை திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என புகார் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயப் பணி உச்சத்தில் இருக்கும் காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்க புதிய மசோதா வகை செய்கிறது. புதிய ஊரக வேலை திட்டப் பணிகள், விக் ஷித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு திட்டத்துடன் இணைக்கப்படும். குறிப்பாக, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான கட்டமைப்பு பணிகள், மோசமான காலநிலையை மட்டுப்டுத்தும் பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.